|
|
தைப்பொங்கல் ஏன்?
இது தமிழர்களின் ஒரு ஆண்டு கழிந்து மறு ஆண்டு தொடங்குவதை கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்..தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது.
| | | |
|
|
|
தைப்பொங்கல். தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது.
தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது.
பொதுவாக இந்து மத விழாக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்கும். அது ஒரு கடவுளையோ, அரக்கனையோ மையப்படுத்தி இருக்கும். அறிவியலுக்கு முரணானதாகவும் ஆபசமாகவும் இருக்கும். அப்படி எதுவும் தைப் பொங்கலுக்கு இல்லை என்பதை வைத்தே இது ஒரு மதம் சார்ந்த விழா இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
பொங்கல் விழாவை சூரிய வழிபாடோடு சுருக்கிப் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும். இது தமிழர்களின் ஒரு ஆண்டு கழிந்து மறு ஆண்டு தொடங்குவதை கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.
தமிழர்கள் ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து கணித்தார்கள். ஆரியர்கள் நான்கு பருவங்களாக மட்டுமே பிரித்து வைத்திருந்தார்கள். தமிழர்கள் கணித்த பருவங்கள் வருமாறு:
1. இளவேனில் ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
உலகின் நாகரீகம் மிக்க இனங்கள் இளவேனில் காலத் தொடக்கத்தை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடினார்கள். தமிழர்களும் அவ்வாறே கொண்டாடினார்கள். இளவேனிற் காலத்தின் தொடக்க நாளை கணித்து அந்த நாளை வரவேற்று பெரும் விழாவாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் சூரியனையும் தமது வாழ்க்கையோடு உடன் நின்ற மாட்டையும் போற்றினார்கள். ஒரு ஆண்டு கழிவது என்பது சூரியனோடு எவ்வளவு தூரம் சம்பந்தப்பட்டது என்பதையும் இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.
பொங்கல் நாளுக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. 1935ஆம் ஆண்டில் ஒன்று கூடிய தமிழ் அறிஞர்கள் தை முதலாம் நாளை திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பாக அறிவித்தார்கள். கிறிஸ்துவுக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்தார் என்பது அந்த அறிஞர்களின் கணிப்பாகும் அந்த அறிஞர்கள் தமிழர்களின் பண்டைய நூல்களை ஆராய்ந்து இந்த முடிவிற்கு வந்தார்கள். 1970ஆம் ஆண்டில் தமிழக அரசும் இதை ஏற்று சட்டபூர்வமான ஆண்டாக அறிவித்தது.
இந்த நாள்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு உறுதியான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லை. ஆயினும் எப்படி யேசு கிறிஸ்துஇ முகம்மது நபி போன்றோர்களின் பிறந்த தினத்திற்கும் சரியான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாது வெறும் நம்பிக்கை மற்றும் பண்டைய நூல்களை ஆராய்ந்து ஒரு அண்ணளவான கணிப்பிலும் கொண்டாடப்படுவது போல் திருவள்ளுவர் ஆண்டையும் கொண்டாடுவதில் தவறில்லை.
அத்துடன் தைப்பொங்கல் நாள் குறித்து உள்ள சில குழப்பங்களையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சில ஆண்டுகளில் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகின்ற பொங்கல் சென்ற ஆண்டு ஜனவரி 15இல் கொண்டாடப்பட்டது. லீப் ஆண்டு வருவதில் ஏற்படுகின்ற குழப்பமே இதற்கு காரணம். தமிழ் ஆண்டுக் கணக்கில் லீப் ஆண்டு என்கின்ற ஒன்று இல்லை. இதை சிலர் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தி, தமது வருமானத்திற்கு ஏற்றமுறையில் பொங்கல் நாளை கணித்துவிடுகிறார்கள்.
நன்றி சபேசன்
எதிர் கருத்து (1)
சபேசன் அவர்களின் தமிழர் திருநாள்-உழவர் திருநாள் கட்டுரை படித்தேன். அவர் கருத்துக்கள் ஏற்புடையன. எனினும் சில மிகைப்படுத்துதல் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வாறு பொங்கல் கொண்டாடப்படுகிறதோ அதே இலக்கணம் மாறாமல் ஆந்திரத்திலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் திறந்தவெளியில் சூரிய வெளிச்சத்தில் பொங்கலிடுவது. இரண்டாம் நாள் கால்நடைகள் திருவிழா மூன்றாம் நாள் ஜல்லிக்கட்டு போன்ற கேளிக்கைகள் நான்காம் நாள் பிக்னிக் செல்வது போன்ற அம்சங்கள் இம்மியளவும் மாறாமல் இதே கிராமிய மணத்துடன் கொண்டாடப்படுவதை நான் விசாகப்பட்டினத்திலிருந்தபோது கவனித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் வந்து தமிழனுக்கு பண்பாட்டு தளத்தில் இருந்த ஒரே தனித்தன்மையும் களவாடப்பட்டு விட்டதே என்ற ஆதங்கத்தில் தெலுங்கு நண்பரிடம் கேட்ட பொழுது அவருக்கும் இதே ஆதங்கம் இருப்பது தெரிய வந்தது. இந்த பண்பாடு எப்படி ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்குச் சென்றது என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
திருவள்ளுவரை உருவகப்படுத்தி படம் வரைவதும் அவரைப்பற்றி வள்ளுவன்-வாசுகி போன்ற விஞ்ஞானத்திற்கு புறம்பான பிற்போக்குத்தனமான கதைகளை புழக்கத்தில் விடுவதும் எனக்கு ஏற்புடையது அல்ல. வள்ளுவன் காலத்தைப் பற்றியும் அவருடைய சமய சார்பு பற்றியும் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. அவர் பிறந்த வருடத்திற்கு ஆதாரங்களாக கொடுப்பது சரிதானா என்று ஆராயப்பட வேண்டும். வீரயுக காலத்து (மூன்றாம் நூற்றாண்டு) கவிஞன் என்றொரு வாதம் உண்டு. சமணசமயத்தவர் என்றொரு வாதம் உண்டு. �அறிஞர்கள்� கணக்கிட்டதை (அதாவது ஆர்க்கமிட்டிஸ அரசரின் கிரீடத்தில் எவ்வளவு செம்பு கலந்துள்ளது என்று அதை அழிக்காமல் கணக்கிட்டதைப்போல்)அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் நாமும் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்குமா என்பதே எனது கேள்வி. ராமர்பிள்ளை கண்டுபிடித்த மூலிகைப் பெட்ரோலை தமிழக அரசு பாராட்டி அன்றைய முதல்வரும் அறிக்கைவிட்டு ஏற்றுக் கொண்டார், தமிழனுக்கு பெருமை என்று பத்திரிக்கைகள் தமிழனின் முதுகு சொறிந்து வியாபாரத்தை நடத்தி கல்லாப்பெட்டியை நிரப்பினார்கள். இறுதியில் ராமர்பிள்ளையின் மோசடி அம்பலமானது. வள்ளுவன் ஒரு Classicஐ கொடுத்திருக்கிறான் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அதற்காக மயிலாப்பூர் நடுத்தெரு மூன்றாம் இலக்க எண்ணில் தான் அவர் குடியிருந்தார் என்றளவுக்கு வாதிடுவது தான் எனக்கு பிரச்சனை. இந்த அணுகுமுறைதான் பலபிரசச்னைகளுக்கு மூலாதாரமாக விளங்கும். நம்பிக்கைதான் பெரியது என்ற வாதம் வந்தால் அங்கே அறிவுக்கு இடமில்லை. இருவர் நம்பிக்கைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால் அது சமூக மோதலாக உருவெடுக்கும்.
---------------------------------------------------- விஜயன்
|